மகாராஷ்டிர மாநிலத்தில் நான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால், மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் உள்ள பாலாஜி நகரில், நான்கு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடம் நேற்று இரவு 11.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் 12 வீடுகள் என மொத்தம் 48 வீடுகள் இருந்தன.
உள்ளாட்சி அமைப்பால், இது ஏற்கனவே ஆபத்தான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில், பழுது பார்க்கும் பணிகள் செய்துகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டடத்தில் விரிசல் விழுந்த சத்தம் கேட்டு, சிலர் வெளியேறினர். கட்டடத்தின் 'பி' பிரிவு பகுதி இடிந்து விழுந்த சத்தம் கேட்டு, அந்தப் பகுதியை சார்ந்த மக்கள் விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள், வெளியேற உதவியுள்ளனர்.
இந்த விபத்தில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப்படை, தாணே பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் தீயணைப்புத் துறை ஆகிய குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.