அசாமில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் வெள்ளம் தீவிரமடைந்துள்ளது.
தெமாஜி, லக்கிம்பூர், திப்ருகர், நல்பாரி, கோக்ராஜார், சிராங் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் தெமாஜி மாவட்டத்தில் மட்டும் 16,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததுடன், அதிக அளவிலான குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, ஆர்ச்சிபாதர் – சிமென் சபாரி இடையிலான ரயில்வே பாலத்தின் கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டதால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
"மத்திய அரசின் முழு உதவியும் அசாமுக்கு வழங்கப்படும்" என அவர் உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.