இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
சர்க்கரை, கோதுமை, கோதுமை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், உள்நாட்டில் கோதுமை விலை உயர்வையும் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்தியா கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.
பின்னர், சில நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்காக, குறிப்பிட்ட அளவில் மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், மத்திய அரசின் மதிப்பீட்டின்படி 2025-26-ம் ஆண்டின் கோதுமை உற்பத்தி 120.657 மில்லியன் டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் உற்பத்தியைக் காட்டிலும் 2.3% அதிகமாகும்.
இதையடுத்து ஏற்றுமதி கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக கருங்கடல் பகுதியில் கோதுமை உட்பட்ட தானியங்களின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி உலக சந்தையில் கோதுமையின் அளவை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.