தேர்தல் ஆணையம் 
இந்தியா

பிகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு - இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு!

Staff Writer

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் ஞானஷ் குமார் இன்று மாலை அறிவித்துள்ளார்.

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெறும் என ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பிகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டப்பேரவையில் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பாட்னா சென்றிருந்தார். தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் அவர், தேர்தல் நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது தீபாவளிக்குப் பின் வரும் சாத் பண்டிகை முடிந்ததும் தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். மேலும், நிறைய கட்டங்களாக நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பிகாரில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக நவம்பர் 6ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன.

மனுத்தாக்கல் தொடக்கம் - அக். 13

மனுத்தாக்கல் முடிவு - அக். 17

வேட்புமனு பரிசீலனை - அக். 21

வேட்புமனு திரும்பப் பெறுதல் அக். 23

வாக்கு எண்ணிக்கை - நவம்பர் -14

பிகாரில் 3.92 கோடி ஆண் வாக்காளர்களும் 3.50 பெண் வாக்காளர்களும் 1725 மாற்றுப்பாலின வாக்காளர்கள் என மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.