மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், காரில் சென்றுகொண்டிருந்த காவலரை விதிமுறைகளை மீறி பைக்கில் சென்ற இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் நள்ளிரவு நேரத்தில் தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு வழி கொடுக்காமல் எட்டு இருசக்கர வாகனங்களில் 14 பேர் சாலையில் தாறுமாறாக வழியை மறித்துச் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்களை எச்சரிக்கும் விதமாக காவல் அதிகாரி ஹாரன் அடித்துள்ளார். முதலில் வழிவிட்ட அந்த கும்பல், பின்னர் சிறிது தூரம் தள்ளி சிக்னல் அருகே சென்று காவல் அதிகாரியின் வண்டியில் மோதினர்.
பின்னர் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருடைய காரைத் தாக்கி, காரின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
இதை தட்டிக்கேட்க காரில் இருந்து வெளியேறிய அதிகாரியைத் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளைப் பேசியுள்ளனர். மேலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அங்கு குடியிருக்கும் மக்கள் அவரைக் காப்பாற்றி, அதிகாரியைத் தாக்கிய கும்பலின் வண்டி எண்களை போலீசாரிடம் கூறினர்.
பொதுமக்கள் அளித்த தகவல்களை வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.