ஒசூரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழகப் பேருந்துகள் 
இந்தியா

கர்நாடகத்தில் முழு அடைப்பு... தமிழகப் பேருந்துகள் ஒசூருடன் நிறுத்தம்!

Staff Writer

கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறும் என்ற அறிவிப்பால் பெங்களூருக்குச் செல்லும் தமிழகப் பேருந்துகள் ஒசூருடன் நிறுத்தப்பட்டுள்ளன.

காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனால், கர்நாடகம் முழுவதும் பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை – பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளியிலும் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரு மாநிலங்களின் எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு பெங்களூருக்குச் செல்லும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள் ஒசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram