இந்தியா

கொலை வழக்கு: கேரள நீதிமன்ற வரலாற்றில் இப்படியொரு தீர்ப்பா?

Staff Writer

கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள பா.ஜ.க.வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர் ரஞ்சித் சீனிவாசன். இவர், கடந்த 2021ஆம் ஆண்டு, தன் குடும்பத்தினர் முன்பாகவே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆலப்புழையில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 12 பேருக்கு நேரடியாகத் தொடர்பு இருந்ததும், 3 பேர் உதவியாக இருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து, நைசாம், அஹ்மல், அனுப், முகமது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாகீர் உசைன், ஷாஜி , சம்னாஸ் அஸ்ரப் ஆகிய 15 பேருக்கும் நேற்று தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கேரளத்தில்ல் ஒரு வழக்கில் 15 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.