உத்தரப்பிரதேசத்தில் வாரணாசியில் தொடர்ந்து நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து வருவதால், ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
வானிலை ஆய்வு மையம், வாரணாசியில் இன்று கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று மட்டும் 25மி.மி. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 2 செ.மீ. நீரின் அளவு நதிகளில் உயர்ந்து வருவதால், எச்சரிக்கை நிலையைத் தாண்டி தற்போது ஆபத்தான நிலையை அடைந்துள்ளது.
வருணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றியிருந்த 11 கிராமப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
மொத்தம் 328 குடும்பங்களைச் சேர்ந்த 1,388 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், தொடர்ந்து கங்கா, வருணா நதிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.