வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் 
இந்தியா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்!

Staff Writer

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3,000 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் எல்.பி.ஜி. நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தொடர்ச்சியாக விடாமல் பெய்த கனமழையால், ஆலையைச் சுற்றியிருந்த பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், வெள்ளநீர் ஆலைக்குள் புகுந்ததால், சிலிண்டர்கள் படல்கங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூகஊடகங்களில் நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள் ஆற்றில் மிதந்து செல்லும் காட்சியும், ஆபத்தை பொருட்படுத்தாது பொதுமக்கள் அவற்றை எடுத்துச் செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள் சிலவற்றில் எரிவாயு நிரப்பப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், அவற்றை யாரும் தொடவோ, வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ கூடாது என்று ராய்கட் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஆற்றங்கரையோரப் பகுதிகளில் சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டால், உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram