காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், வந்தே மாதரம் பாடலை முதல் முறையாக முழுமையாகப் பாடினர்.
இதில், சோனியா காந்தி பாடலை அவமதித்ததாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உட்பட்டோர் கலந்துகொண்டனர்.
கொடியேற்றத்திற்குப் பிறகு வந்தே மாதரம் பாடப்பட்டது. வழக்கமாக இரண்டு வரிகள் மட்டுமே பாடப்படுவதை மீறி, முழுப் பாடலையும் குழுவினர் பாடினார்கள்.
அப்போது, இடையில் நிறுத்தும்படி சோனியா காந்தி சைகை காண்பித்ததாகவும், தேசியப் பாடலை அவமதிக்கும் வகையில் அவர் செயல்பட்டதாகவும் பா.ஜ.க. ஆதரவு தரப்பினர் சமூக ஊடகத்தில் கருத்திட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தி வந்தே மாதரத்தை நிறுத்தச் சொல்லவில்லை என காங்கிரஸ் கட்சி உடனடியாக மறுப்புத் தெரிவித்தது.
இதுகுறித்து விளக்கமளித்த காங். மூத்த நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ், "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால், அவருக்கு அமர நாற்காலி வழங்குமாறு மட்டுமே சோனியா காந்தி கேட்டுக்கொண்டார்." என்று தெரிவித்தார்.