காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தகத்தை இந்தியாவில் அச்சிட்டு வெளியிடப்போவதாக 'ஹார்ப்பர்காலின்ஸ் இந்தியா' பதிப்பகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
'பிளாங்கிங் : எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற தலைப்பில் சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகம் வருகின்ற நவம்பர் 10 அன்று இந்தியா, வெளிநாடுகளில் வெளியாகும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
'ஆல்ஃபிரட் ஏ. நாஃப்' பதிப்பகத்தால் வெளிநாடுகளில் இந்தப் புத்தகம் வெளியிடப்படவுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட இருந்தது. ஆனால், இந்தப் பதிப்பகம் வெளியிடப்போவதில்லை என்பதை அண்மையில் தெளிவுபடுத்தியது.
அதைத் தொடர்ந்து, 'ஹார்ப்பர்காலின்ஸ் இந்தியா' பதிப்பகத்துடன் சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில், அந்தப் பதிப்பகம் அதிகாரபூர்வமாக இதை ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, 'ஹார்ப்பர்காலின்ஸ் இந்தியா' பதிப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சோனியா காந்தி எழுதிய 'பிளாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற நூலை ஹார்பர்காலின்ஸ் இந்தியா வெளியிடவுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நினைவுக் குறிப்பு, வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் வெளியிடப்படும்.
அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் நினைவுக் குறிப்புகளில் ஒன்றான 'பிளாங்கிங்', அன்பு, அடையாளம், கடமை, சொந்தம் ஆகியவற்றை குறித்த ஒரு தன்மைவாய்ந்த, ஆழ்ந்த தனிப்பட்ட வாழ்க்கைக் கதையாகும்.
மேலும் இது, இந்தியாவின் பயணத்தைப் பற்றி ஒருவரின் அரிய- ஆழமான பார்வையையும் இந்தப் புத்தகம் வழங்குகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.