அசாம் மாநிலத்தில் இன்று விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உடைந்து நாசமானது.
ஜோர்ஹாட்டில் இந்திய விமானப்படைத் தளம் உள்ளது. அங்கு இன்று காலையில் ஏன்-32 இரக விமானம் தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்தில் விபத்து நிகழ்ந்தது என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி முழுவதும் விமானத்தின் சிதறல்கள் பரவி வ்ழுந்துள்ளன.
விமானம் தரையிறங்கிய பிறகு தீப்பிடித்ததாகவும், அதன் சிதைவுகளின் சில பகுதிகளில் இருந்து தீப்பிழம்பும் புகையும் வெளிவந்தபடி இருந்தது என்றும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. பாதுகாப்புப் படையினரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விமானத்தின் விமானி குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. விபத்து நேரத்தில் விமானத்தில் இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
அன்டோனோவ் ஏஎன்-32 என்பது இரட்டை எஞ்சின் கொண்ட ஒரு இராணுவப் போக்குவரத்து விமானமாகும். இது இந்திய விமானப்படையால், குறிப்பாக சவாலான நிலப்பரப்புகள், உயரமான பகுதிகளில், தளவாடங்கள், படைவீரர் நகர்வு மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில், இதே விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய் போர் விமானம் ஒன்று பயிற்சிக்காகப் புறப்பட்டது. அப்போது, கார்பி ஆங்லாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.