ஆந்திரப்பிரதேசத் தலைநகர் அமராவதியில், இந்தியாவின் முதல் குவாண்டம் - ஏஐ பல்கலைக்கழக வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தை அமைக்கிறது.
அமராவதியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படவுள்ள இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு ரூ.730.70 கோடி நிதி அளிக்கிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன், ஏஐ – மெசின் லேர்னிங், செமிகண்டக்டர் தொழில்நுட்பம், சிப் டிசைன் உட்பட்ட பல்வேறு துறைகளில் கல்வி, ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது.
இங்கு இளநிலை, முதுநிலை, பிஎச்.டி. ஆகிய படிப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நடப்பு ஆண்டு செப்டம்பர் முதல் குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தற்காலிகமாக வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், பின்னர் நிரந்தர வளாகம் அமராவதியில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.