இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில், இந்திய விமானப்படை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய 'ககந்தக்-243' கிளைட் குண்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
'ககந்தக்-243' என்பது விமானத்திலிருந்து ஏவப்பட்ட பின்னர், சாதாரண குண்டுகளைப் போல நேராகக் கீழே விழாமல், காற்றில் நீண்ட தொலைவு சறுக்கிச் சென்று இலக்கைத் தாக்கும் என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டின் எடை 300 கிலோ ஆகும். இதை 12,000 மீட்டர் உயரத்திலிருந்து ஏவும்போது, 140 கி.மீ. அதிகமான தொலைவைக் கடந்து இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இதனால், போர் நேரங்களில் எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும்போது, மிக நெருங்கிச் செல்லாமல் இந்தக் குண்டின் உதவியுடன் தொலைவிலிருந்தே தாக்குதலை நடத்தலாம் என்று விமானப் படை தெரிவித்துள்ளது.
'சுகோய்-30 எம்.கே.ஐ.' போர் விமானத்தை அடிப்படையாகக் கொண்டு 'ககந்தக்-243'-இன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆயுதத்தை ஜெ.எஸ்.ஆர். டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.