அஜித் பவார் மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வருமான மம்மதா பானர்ஜி கோரிக்கை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அஜித் பவாரின் தனி விமானம் இன்று காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜித் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”அஜித் பவாரின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சொல்லப்போனால் அரசியல் தலைவர்களுக்கு கூட இங்கே பாதுகாப்பு இல்லை. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலக இருப்பதாக மற்றொரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியத சமூக ஊடகங்கள் வழியாக அறிந்தேன்.
இன்று நடந்த சம்பவம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.