இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை நேரடியாக சைபர் கிரைம் இணையதளத்தில் புகாரளிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், இந்திய சட்டங்களுக்கு இணங்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை இந்திய இணையதள குற்றப்பிரிவு இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்ய மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எங்களின் சமூக ஊடகத் தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க மத்திய அரசுடன் இணைந்து எங்கள் நிறுவனம் பணியாற்ற கடமைப்பட்டுள்ளது.
எனவே, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் இயங்கும் இணையதளக் குற்றப்பிரிவின் தளத்தில், இனி மெட்டா நிறுவனம் நேரடியாகப் பதிவு செய்யும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.