தர்மேந்திர பிரதான் 
இந்தியா

ஜூன் 21-ல் மீண்டும் நீட் தேர்வு- தர்மேந்திர பிரதான்

Staff Writer

நாடு முழுவதும் நடத்தப்பட்டு, இரத்துசெய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மீண்டும் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடத்துவது என மைய அரசு தீர்மானித்துள்ளது. 

தில்லியில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முறைகேடுகள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கடந்த 3ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நடத்தப்படுவதற்கு சில நாள்கள் முன்னர் வினாத்தாள் கசிந்த தகவல் வெளியானது.

அதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பு- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கடந்த 8,9,10,11 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டு, 12ஆம் தேதியன்று தேர்வு இரத்து அறிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணையில் யாரும் தப்பிவிட முடியாது என்றும் குற்றவாளி தேசிய தேர்வு முகமைக்கு உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி என்றும் அமைச்சர் கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் கணினிவழித் தேர்வாக இது நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.