கடந்த மாதம் ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுதேர்வில் இயற்பியல் பாடப்பிரிவில் இரண்டு கேள்விகளில் இருந்த குளறுபடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நீட் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். அதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உட்பட்ட பாடப்பிரிவுகளில் தலா 45 கேள்விகள் கேட்கப்படும்.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் இயற்பியல் பாடத்தில் 40ஆவது கேள்வியாகக் கேட்கப்பட்டிருந்த வெர்னியர் அளவி குறித்த கேள்விக்கான சரியான பதில், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதில்களில் இல்லாததால் அதை தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளது.
மேலும், அந்தக் கேள்விக்கு விடை அளித்தவர் அளிக்காதவர் என்ற எந்த பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதேபோல், மின்காந்த அலை குறித்து கேட்கப்பட்டிருந்த 22ஆவது கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருந்தன. அதில் இரண்டு பதில்களுமே சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.