நாடு முழுவதும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு காண, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் 4 சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 1979ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள மிகவும் பழைய சிவில் - குற்றவியல் வழக்குகள் முதற்கட்டமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இந்த 4 அமர்வுகளில், 2 அமர்வுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளையும் மற்ற 2 அமர்வுகள் பழைய குற்றவியல் வழக்குகளையும் மட்டும் விசாரிக்கும்.
புதிய வழக்குகளுக்குப் பதிலாக, பல ஆண்டுகளாக தீர்ப்புக்காகக் காத்திருக்கும் வழக்குகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் இந்த சிறப்பு அமர்வுகள் செயல்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம் பல ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வழக்குதாரர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் தேங்கியுள்ள பழைய வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.