முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  
இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு ப. சிதம்பரம் எழுப்பிய 7 கேள்விகள்!

Staff Writer

பிகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும் பதில் அளித்து வருகிறது.

இதற்கு மத்தியில், பிகார் மாநில தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தேர்தல் ஆணையத்திற்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; ”இந்திய தேர்தல் ஆணையத்தை நான் எந்த செயலுக்காகவும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஆனால், பிகார் வாக்காளர் பட்டியல் குறித்த சில கேள்விகளுக்கான பதில்களை இந்திய மக்களும், பிகார் மக்களும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.

1.மத்திய அரசின் மதிப்பீட்டின்படி பிகாரில் 18 வயதை பூர்த்தி செய்தவர்களின் மக்கள் தொகை எவ்வளவு?

2. 18 வயதை பூர்த்தி செய்தோரின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேரின் பெயர்கள் பிகார் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன? அது 90.7 சதவீதமா?

3. மீதமுள்ள 9.3 சதவீத 18 வயதை பூர்த்தியடைந்த மக்கள் தொகையின் நிலை என்ன? அவர்கள் ஏன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை?

4. வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை பெயர்கள் தகுதியில்லாதவை? அதன் எண்ணிக்கை 24,000 இருக்குமா?

5. வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை வீட்டு எண்கள் காலியாக உள்ளன அல்லது தகுதியில்லாதவை? அந்த எண்ணிக்கை 2,00,000க்கும் அதிகமாக இருக்குமா?

6. வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எத்தனை பெயர்கள் இரட்டை அல்லது நகல் பதிவுகள்? அந்த எண்ணிக்கை தோராயமாக 5,20,000 இருக்குமா?

7. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் தேர்தல் ஆணையம் (ECI) இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்,” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.