நடிகை செலினா ஜெட்லி - தொழிலதிபர் பீட்டர் ஹாக் 
இந்தியா

ரூ.50 கோடி இழப்பீடு, ரூ.10 லட்சம் மாத பராமரிப்பு தொகை… கணவருக்கு எதிராக பிரபல நடிகை வழக்கு!

Staff Writer

பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி தன்னுடைய கணவருக்கு எதிராக மும்பை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குடும்ப வன்முறை வழக்கைத் தொடர்ந்து உள்ளார்.

முன்னாள் இந்திய அழகியும், பாலிவுட் நடிகையுமான செலினா ஜெட்லி (வயது47), கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரியாவைச் சேர்ந்த தொழிலதிபர் பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், செலினா தன்னுடைய கணவருக்கு எதிராக மும்பை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குடும்ப வன்முறை வழக்கைத் தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், கணவர் பீட்டர் ஹாக் என்னை உடல், மனதளவில் கொடுமைப்படுத்துகிறார். மேலும் பாலியல் ரீதியாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டி துன்புறுத்தினார். எனவே நான் ஆஸ்திரியாவில் இருந்து மும்பைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

பீட்டர் ஹாக் சுயநலவாதி, தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவர், முன் கோபக்காரர், மதுவுக்கு அடிமையானவர். இதன் காரணமாக தனக்குத் தொடர்ந்து மனவழுத்தம் ஏற்பட்டது. பீட்டர் ஹாக் என்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஆஸ்திரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் எனக்கு ரூ.50 கோடி ஜீவனாம்சம், மாதந்தோறும் ரூ.10 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும். எனது பிள்ளைகளைப் பார்க்கவும் என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.