ஆளுநரின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும் மசோதா மீது நீண்ட காலம் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பிலிருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை வாசித்து வருகிறது.
தமிழக ஆளுநர், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது. மாநிலங்களின் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள்ளும், குடியரசுத் தலைவர் 3 மாத காலத்திற்குள்ளும் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியது.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவியால் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் காலக்கெடு தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 முக்கிய கேள்விகளை எழுப்பினார். அதில், இப்படி ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர்கள், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் எல்லைகள் என்ன? ஆளுநர்- குடியரசுத் தலைவர் நடவடிக்கைகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளை திரவுபதி முர்மு எழுப்பி இருந்தார். இது தொடர்பான விசாரணையில் பல்வேறு முக்கிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதேநேரத்தில் காலக்கெடு விதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ”மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த பதிலும் அளிக்காமல் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது. கால வரம்பின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் இருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம்.
மத்திய அரசு குறிப்பட்டதை போல் ஆளுநருக்கு 4-வது தெரிவு கிடையாது, 3 தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் திருத்தங்கள் கோரி கருத்துகளுடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது. மசோதவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை எங்களால் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் முதன்மையானதாக இருக்க முடியும்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.