இந்தியா

போச்சா... இஸ்ரேல் - ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

Staff Writer

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமாக ஹார்முஸ் ஜலசந்தி அறியப்படுகிறது. இந்த வழியாகத்தான் உலகளவில் 20 முதல் 30 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது.

தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடி விடுவோம் என்று ஈரான் நீண்டகாலமாகவே எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் பெறப்படவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் மூடப்படுவதாய் இருந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஏனெனில், இந்தியா தனது 80 முதல் 90 சதவிகித கச்சா எண்ணெய்யை இறக்குமதிதான் செய்கிறது.

பெரும்பாலும் சௌதி அரேபியா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இறக்குமதி செய்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை உடனடியாக அதிகரிக்கும்.

கச்சா எண்ணெய்யில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவின் இறக்குமதி செலவுகள் தானாகவே அதிகரிக்கும். இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகளில் உயர்வு ஏற்படும் அழுத்தம் உண்டாகும்.

அதாவது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒரு டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் ஒரு பில்லியன் டாலர் அதிகரிக்கும். இதனால், உள்நாட்டு எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.