உத்தராகண்ட்  முதல்வர் புஷ்கர் சிங் தாமி
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 
இந்தியா

பொது சிவில் சட்டம் விரைவில் நிறைவேற்றம்! – உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி

Staff Writer

உத்தராகண்ட்டில் வர இருக்கும் சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் மத வேறுபாடு இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்த பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக.வின் முக்கிய கொள்கையாக உள்ளது.

அந்தவகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தீவிரம்காட்டி வருகிறார். பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிப்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்திருந்தது.

இதுகுறித்து உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் தளத்தில், “உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியுடன் இருக்கிறது. வரவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு, சட்டமாக இயற்றப்படும். இதன் மூலம் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, பிப்ரவரி 2 ஆம் தேதி மாநில அரசிடம் தனது வரைவு மசோதாவை சமர்ப்பிக்கும். அதன்பிறகு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.