முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் 
இந்தியா

‘ஜிஎஸ்டி வரிகுறைப்பை வரவேற்கிறோம். ஆனால் இது ரொம்ப லேட்டு’ - ப.சிதம்பரம்

Staff Writer

ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைத்திருப்பதை வரவேற்பதாக கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு வரி சீர்த்திருத்தத்தை செய்ய தூண்டியது எது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை இரண்டாகக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5 சதவிகிதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றும் இரண்டாவது நாளாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதற்குப் பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டி தரநிர்ணயம் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களைக் குறைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இது 8 ஆண்டுகள் தாமதமாக வந்துள்ளது. தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இதுவரை நிலவிய விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் அமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தன. அரசாங்கத்தை இந்த மாற்றங்களைச் செய்யத் தூண்டிய காரணங்களை ஊகிப்பது சுவாரசியமாக இருக்கும்:

மந்தமான பொருளாதார வளர்ச்சியா?

பெருகிவரும் குடும்பக் கடன்களா?

குறைந்து வரும் குடும்ப சேமிப்புகளா?

பீகார் தேர்தல்களா?

டிரம்பின் வரி விதிப்பா?” என சரமாரியான கேள்விகளை முன் வைத்துள்ளார் ப.சிதம்பரம்.