முதலமைச்சர் மு.க. ஸ்டாலிடன் விருது பெற்ற நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ் 
செய்திகள்

‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற்ற நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ்!

Staff Writer

2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’, நக்கீரன் எனும் பெயரில் புலனாய்வு இதழினைத் தொடங்கி பல ஆண்டுகளாகப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக இதழினை நடத்திவரும் நக்கீரன் ரா. கோபாலுக்கு வழங்கிடவும்; கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாகப், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கிட முதலல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபாலுக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக சுகிதா சாரங்கராஜுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.