இந்தியாவிலேயே மிகப்பெரிய படங்களில் ஒன்றாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் அமையும் என்று அந்த படத்தின் இயக்குநர் சுந்தர் சி கூறியுள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் காமெடி ஃபேண்டசி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இப்படத்தில் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்த முறை பிரம்மாண்டமாக பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த நிலையில் பூஜையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். மேலும் யோகி பாபு, குஷ்பு,மீனா, ரெஜினா, நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் ஆதியும் கலந்து கொண்டார்.
விழா மேடையில் பேசிய சுந்தர்.சி, “இந்தப் படம் ஐசரி சாருடைய விஷன். ஒரு டைரக்டரா எங்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும். அதை நிறைவேற்ற மிகப் பெரிய சக்தி தேவைப்படும். அந்த சக்திதான் வேல்ஸ் நிறுவனம். இந்தப் படத்தை சிறியதாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால் கதை போகப்போகப் பெரிய படமாக மாறிவிட்டது. என் சினிமா வாழ்க்கையிலேயே நான் இயக்கப் போகிற மிகப்பெரிய படம் இந்தப் படம்தான். மேலும் இந்தியாவின் மிகப் பெரிய படங்களில் ஒன்றாக இந்த படம் அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.
வீடியோ லிங்க்: