தன்னுடைய அடுத்தப் படம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனே தன்னுடைய அடுத்தப் படம் குறித்து விளக்கமளித்து ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது.
அதற்காக வெற்றி மாறன் மேற்கொண்ட ப்ரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. தன்னுடைய அடுத்தப் படம் குறித்து பல்வேறு ஊகங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனே தன்னுடைய அடுத்தப் படம் குறித்து விளக்கமளித்து ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.
வெற்றி மாறன் பேசுகையில், "என்னுடைய அடுத்தப் படத்தை தாணு சார் தயாரிக்கவிருக்கிறார். அதில் சிம்பு நடிக்கவிருக்கிறார்.
நீங்கள் என்னுடைய அடுத்தப் படத்தைப் பற்றி கேட்டீர்கள், அதற்கான பதில்தான் இது. எழுத்துப் பணிகளில் ஏற்படும் தாமதங்களாலும், தொழில்நுட்பக் காரணங்களாலும், விலங்குகள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்பு கருதியும் வாடிவாசல் திரைப்படம் உருவாகுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கிறது.
தாணு சார்தான் 'சிம்புவைச் சந்திக்கலாமா' என்று கேட்டார். பிறகு, நான் சிம்புவைச் சந்தித்தேன்.
சந்திப்பின் அடுத்த சில மணி நேரங்களிலேயே எல்லாம் சரியாக அமைந்தது. இது வடசென்னை 2 ஆக இருக்கும் என்று பேச்சுகள் இருக்கின்றன. ஆனால், இது வடசென்னை 2 இல்லை.
கண்டிப்பாக, வடசென்னை 2 அன்புவின் எழுச்சியாகத்தான் இருக்கும். தனுஷ் நடிப்பதுதான் வடசென்னை 2 ஆக இருக்கும். இந்தப் படம் வடசென்னை உலகத்தில் நடக்கும் கதை. வடசென்ன படத்தின் கதை நிகழும் காலகட்டத்தில்தான் இந்தப் படத்தின் கதையும் நிகழும்.
அதற்கான தனுஷிடம் பேசினேன். அவர்தான் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர். எனவே சிம்புவை வைத்து வடசென்னை உலகில் ஒரு படம் பண்ண இருப்பதை பற்றி அவரிடம் சொன்னேன். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கு என்னென்ன தேவையோ அந்த விஷயங்களை எல்லாம் எடுத்துக்க சொன்னார். அதற்காக அவர் எந்த பணமும் கேட்கவில்லை. ஆனால் வெளியே சில வதந்திகளை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. தனுஷ் பற்றியும் என்னை பற்றியும் சில வதந்திகள் வருகின்றன.
உண்மையிலேயே அதெல்லாம் என்னை காயப்படுத்தியிருக்கின்றது. அதனால் தான் இதனை தெளிவுபடுத்தலாம் என்ற நோக்கத்தில் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இந்த வதந்தியை எல்லாம் பார்த்துவிட்டு சிம்பு என்னை பார்க்க வந்தார். உங்களுக்கும் தனுஷிற்கும் இந்த படத்தினால் எந்த மன கசப்பும் வந்திவிடக்கூடாது. அதற்கு ஏற்றவாறு நாம் படம் பண்ணலாம்.
தனுஷ் -சிம்பு இடையே நல்ல உறவு இருக்கின்றது. எனவே இந்த வதந்திகளை எல்லாம் யாரும் நம்பவேண்டாம்” என வெற்றிமாறன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.