செய்திகள்

‘பேட் கேர்ள்’ படத்துக்கு புது சிக்கல்... அடுத்தடுத்த சர்ச்சையில் வெற்றிமாறன் படங்கள்!

Staff Writer

‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை சோசியல் மீடியாவில் இருந்து நீக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ‛பேட் கேர்ள்'. இந்த படத்தை வர்ஷா பரத் என்பவர் இயக்கி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டபோது அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதில், டீன்ஏஜ் பெண்களின் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மனச்சிக்கல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதனால் பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கும் விதமாக இந்த டீசர் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ‛யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த பேட் கேர்ள் படம் சம்பந்தமாக தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இந்த டீசரில் சிறுவர் சிறுமிகள் குறித்தான ஆபாச காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. அதனால் சோசியல் மீடியாவில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. என்றாலும் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டதால் எந்தவித சிக்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி படம் திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பேட் கேர்ள் படத்துக்கு இப்படி ஒரு சோதனை நேர்ந்துள்ளது.