செய்திகள்

என்னது..? வந்தேபாரத் ரயிலில் அசைவ உணவு நீக்கமா?

Staff Writer

வந்தே பாரத் ரயில் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்ற பிரபலமான ஒன்றாகும். சென்னையில் இருந்து நாகர்கோவில், மைசூர், பெங்களூரு, திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில்களில் காலை உணவு பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் சங்கடம் அடைந்துள்ளனர்.

பயணிகள் ஐஆர்சிடிசி (IRCTC) செயலியில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது அவர்களின் தனிப்பட்ட விவரங்களையும், உணவு விருப்பத்தினையும் உள்ளீடு செய்த பின் “அசைவ உணவு மதியம், இரவு வேளைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்” என்ற குறிப்பு வருகிறது.

சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த ஒரு பயணி சைவ உணவு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் எக்ஸ் தளத்தில் ஐஆர்சிடிசி இடம் கேள்வி எழுப்பியுள்ளார். அசைவம் அல்லது சைவ உணவைத் தேர்வு செய்ய வேண்டியது எங்களுடைய உரிமை அதை ரயில்வே நிர்வாகம் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி தடுக்கக்கூடாது என்கின்றனர் பயணிகள்.

அதிகாரிகள் தரப்பில் இது ஐஆர்சிடிசி செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்றும் அசைவ உணவு எல்லா வேலைகளிலும் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி எழுதப்படும் வேளையிலும் அசைவ உணவு மதியம், இரவு மட்டுமே உண்டு என அச்செயலி காட்டுகிறது.