ஜெயக்குமார் - ஓ.பன்னீர்செல்வம் 
செய்திகள்

‘ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு’ – ஜெயக்குமார் கிண்டல்!

Staff Writer

அதிமுக இணைப்பு குறித்து ரகசியம் தன்னிடம் உள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு; கொசு பிரச்சினையைவிட பேச வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன.’ என ஜெயக்குமார் கிண்டலாகப் பதில் அளித்தார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

அதிமுகவை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைத்தான். ஒரு மொழியை திணித்துத்தான் நிதி கொடுப்பேன் என்று சொன்னால் எப்படி?. அண்ணா, எம்.ஜி.ஆர். சொன்னதும் இருமொழி கொள்கைதான்.

புயல் பாதிப்புக்கு நிதி கேட்டாள் பத்தில் ஒருபங்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. மற்ற மாநிலத்துக்குத் தரப்படும் நிதி பட்டியலை மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட வேண்டும். மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மத்திய அரசு இப்படி நடந்து கொண்டால், எதற்கு மத்திய அரசுக்கு வரிகட்ட வேண்டும் என யோசிப்பார்கள்.

திமுக எம்.பி.க்கள் அனைவரும் பேசி தமிழ்நாட்டிற்கான நிதியை வாங்கி இருக்கலாம். தமிழ்நாட்டின் உரிமையை அதிமுக விட்டுக்கொடுக்காது.

2026ஆம் ஆண்டுக்கு பின் பாஜகவோடு திமுக கூட்டணி வைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. திமுகவின் பாஜக எதிர்ப்பு, 'அடிப்பதுபோல அடிக்கிறேன்; அழுவது போல அழு' என இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஒரு கொசு; கொசு பிரச்சினையைவிட பேச வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. அதிமுக இணைப்பு குறித்து ரகசியம் தன்னிடம் இருப்பதாக ஓபிஎஸ் தெரிப்பது தொண்டர்கள் மத்தியில் எடுபடாது. அவருக்கு ரகசியம் தெரிந்தால் சொல்லட்டும். ” இவ்வாறு அவர் கூறினார்.