இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, சர்வதேச வனவிலங்கு தினத்தையொட்டி, கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டார்.
உலக நாடுகளில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடம் என்ற பெருமையை பெற்றுள்ள கிர் சரணாலயத்தில் வனவிலங்குகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்கும் லயன் சவாரி (Lion safari) என்ற பயணத்தை மேற்கொண்டார்.
அதற்காக அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்றார். கேமரா மூலம், வனவிலங்கு சரணாலயத்தில் நடமாடிய சிங்கத்தை போட்டோ எடுத்து மகிழ்ந்தார். கேமராவில் எடுத்த புகைப்படங்களை பிரதமர் மோடி, தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுக் கூறியுள்ளதாவது:
“இன்று உலக வனவிலங்கு நாள் என்பதால் கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகம் கிர் வனப்பகுதியில் லயன் சபாரி சென்றேன். நான் குஜராத் முதல்வராக இருந்து இங்கே வந்த போது செய்த பல பணிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.
கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர், அவர்களை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பங்கு பாராட்டத்தக்கது. என்று பதிவிட்டுள்ளவர், மற்றொரு பதிவில், ”கடந்த பத்தாண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நம்முடைய உழைப்பை காட்டுகிறது.
நீங்களும் கீர் சரணாலயத்தை வந்து பார்வையிடுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.