பிலால் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 
செய்திகள்

பிரியாணி சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி… பிலால் கடைக்கு அதிகாரிகள் பூட்டு!

Staff Writer

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடையில் உணவருந்திய 18 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குச் சோதனை செய்யச் சென்ற உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்குப் பூட்டுப் போட்டுச் சென்றனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடையில் கடந்த 30ஆம் தேதி உணவருந்திய 18 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உறவினர்கள் உணவகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சட்ட ரீதியாகப் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் சென்றனர். அப்போது அங்கு உரிமையாளர் இல்லாததால் கடைக்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பூட்டுப் போட்டுச் சென்றனர்.