நடிகர் தனுஷ் 
செய்திகள்

‘ராஞ்சனா ரீ-ரிலீஸ் என்னை தொந்தரவு செய்கிறது’ - தனுஷ் கண்டிப்புக்கு என்ன காரணம்?

Staff Writer

“ஏ.ஐ. கிளைமேக்ஸ் காட்சியுடன் ராஞ்சனா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது முற்றிலுமாக என்னைத் தொந்தரவு செய்திருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட கிளைமேக்ஸ் படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது.” என நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், கடந்த 2013இல் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற திரைப்படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரிலும் ரிலீஸானது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

ஆனந்த் எல். ராய் - தனுஷ் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி தற்போது புதிய படத்தில் இணைந்திருக்கிறது.

இந்த நிலையில், ராஞ்சனா திரைப்படம், 2013இல் வெளியான வெர்ஷனில் தனுஷ் இறப்பது போன்று இருந்த கிளைமேக்ஸ் காட்சியை, ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தனுஷ் உயிரோடு வருவது போல மாற்றப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால், படத்தின் க்ளைமேக்ஸ் மாற்றி ரீ-ரிலீஸ் செய்ததை எதிர்த்த இயக்குநர் ஆனந்த் எல். ராய், "கிளைமேக்ஸ் கட்சி மாற்றுவது குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனது படத்தை அவமரியாதை செய்துவிட்டார்கள். நான் மன உளைச்சலில் இருக்கிறேன்." என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சி மாற்றி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது குறித்து நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் தனுஷ், "ஏ.ஐ. கிளைமேக்ஸ் காட்சியுடன் ராஞ்சனா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது முற்றிலுமாக என்னைத் தொந்தரவு செய்திருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட கிளைமேக்ஸ் படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது.

படத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினர், என்னுடைய தெளிவான ஆட்சேபனையையும் மீறி ரிலீஸ் செய்திருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் இதுல்ல.

திரைப்படங்களையோ அல்லது அதன் கதையையோ மாற்ற ஏ.ஐ.பயன்படுத்துவது, கலை மற்றும் கலைஞர்கள் இரு தரப்புக்கும் மிகவும் கவலையளிக்கும் முன்னுதாரணம்.

சினிமாவின் மரபை இது அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.