மருத்துவர் கே.எம்.செரியன்  
செய்திகள்

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் செரியன் காலமானார்!

Staff Writer

இந்தியாவில் முதல்முதலாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து காட்டியவரும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவருமான கே. எம். செரியன் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிக்சையை செய்து காட்டியவர். குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடி. முதல் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்குரியவராவார்.

சென்னையில், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியவர் செரியன். அவருக்கு 2005ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது மறைவு மருத்துவத்துறையில் ஈடு செய்ய இயலாததொரு பேரிழப்பாகப் பார்க்கப்பகிறது. அவரது மறைக்குவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்திமழை டிசம்பர் மாத இதழில் வெளியான மருத்துவர் செரியன் நேர்காணல்: இதயத்தைப் பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்க!