பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக பேரவைத் தலைவராக இருந்து வருகிறார். இவரை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
அந்தவகையில், அதிமுக கொண்டு வந்த பேரவைத் தலைவரை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கொண்டு வந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்படுகிறது என சபையில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவு அவையில் இருந்து வெளியே சென்றார். பின்னர், துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தினார். அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினர். திமுக கூட்டணி கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக பேசினார்கள். பாமக, பாஜக உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை புறக்கணித்தனர்.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “பேரவைத்தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்; தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்; சபாநாயகரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் பேசினால், பேரவைத்தலைவர் அவசரப்படுத்துகிறார்.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது அப்பாவு அவசரப்படுவது ஏன்?. யாருடைய கட்டளையின்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது சபாநாயகர் இடையூறு செய்கிறார்?. ஆளுங்கட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக சபாநாயகர் என்பவர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. கடந்த 4 ஆண்டுகளில் சட்டப்பேரவை 400 நாட்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 116 நாட்கள் மட்டும் நடத்தியது ஏன்?.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரான தான் பேசும் போது நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்?. நான் முதலமைச்சராக இருந்தபோது சில திமுக எம்எல்ஏக்கள் எனது இருக்கையில் ஏறி நடனமாடினார்கள். நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார். ‘போங்க போங்க’ என கிண்டல் செய்கிறார்” என பல குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார்.
தீர்மானம் தொடர்பான விவாதத்தில் முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “மக்கள் நம்பிக்கை இழந்தவர்களால் இந்த தீர்மானம் கொண்டு வந்திருப்பதை பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பதுதான் உண்மை. கடந்த 2017 ஆம் ஆண்டு என்னால் இதுபோன்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக வருந்தினேன் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். கடந்த 2006 -2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் நம்முடைய பேரவை தலைவர் பேரவையின் உறுப்பினராக இருந்துள்ளார்.
அப்போதில் இருந்து அவரை எனக்கு நன்றாக தெரியும். நேர்மையான கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்கும் பண்பு கொண்டவர். அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பேசும் பண்பும் என்னை கவர்ந்த காரணத்தினால் தான் அவரை பேரவை தலைவராக முன்மொழிந்தேன். அப்பாவு கனிவானவர் அதே நேரத்தில் கண்டிப்பானவரும் கூட, அந்த இரண்டுமே அவை நடத்துவதற்கு முக்கியமானது.
கடந்த காலங்களைப் போல இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுதான் என நினைத்து அப்பாவு செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கண் ஜாடையாக கூட அப்பாவுவிடம் பேசி நான் பார்த்திருக்கிறேன். 2017ஆம் ஆண்டு அவையில் நான் பேசியதை நினைவு கொள்கிறேன். எத்தனை விதிமீறல்கள் மரபுகளில் இருந்து விலகல்கள், என்னுடைய உரையில் அன்று நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அதனை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. இருப்பினும் நான் அதற்காக வேதனை கொண்டேன். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் அப்பாவுவினை நான் முன்மொழிந்தேன்.
என் தலையீடோ, அமைச்சர்கள் தலையீடோ இன்றி பேரவையை நடத்தி வருகிறார். நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. விருப்பு, வெறுப்பின்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். சுதந்திரக் காற்றை இந்த பேரவை சுவாசிக்கிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து சிறப்பாக செயல்படுகிறார்.
உண்மைக்கு மாறான செய்திகள் தீர்மானத்தில் உள்ள காரணத்தினால் பேரவை தலைவர் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சரான எனக்கு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மணி நேரம் 58 ஒரு நிமிடம் பேசியிருக்கிறார். பேரவை கடைபிடிக்க வேண்டிய பண்பாட்டினை பேரவை தலைவராக அப்பாவு கடைபிடித்துள்ளார்.
பல நாட்களில் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டு திமுக உறுப்பினர்கள் பேச பெயர் இடம்பெற்றிருந்தும் இன்னொரு நாள் பேசலாம் என்று கூறி தவிர்த்திருக்கிறார்கள். இந்த அரசின் மீது குற்றம், குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தால் இப்படி ஒரு தீர்மானமா? உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்ததற்கு உங்கள் மனசாட்சி உறுத்தும், இதனை பேரவை தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை அவை ஏற்காது”என்றார்.