சுப்பிரமணியன் - பிரமிளா 
செய்திகள்

ஆர்.டி.ஓ. - பள்ளி ஆசிரியை தற்கொலைக்கு இதுதான் காரணமா...?

Staff Writer

நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படைப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய இவர் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார்.

இவரது மனைவி பிரமிளா(50). ஆண்டாபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாமக்கல் அருகே வகுரம்பட்டியில் நேற்று (ஜூலை 6) அதிகாலை 5 மணி அளவில், கணவன், மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுப்பிரமணி – பிரமிளா இருவரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர், அவர்களது மகள் சம்யுக்தா (25) வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால் அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.