விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் டிலைட்டா ரவியை பெண் என்றும் பாராமல் திமுக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாக கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நா.த.க. தலைவர் சீமான் ஆவேசப்பட்டுள்ளார்.
”கள்ளச்சாரயம் விற்பவர்களை, கஞ்சா கடத்துபவர்களை, பள்ளிக்குழந்தைகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை, வழிப்பறி, கொலை, கொள்ளை உட்பட்ட கொடுங்குற்றச்செயலில் ஈடுபடுபவர்களைத் தடுக்க திறனற்ற தமிழ்நாடு அரசின் காவல்துறை அப்பாவி பொதுமக்களைத் தாக்குவது என்பது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்.” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
”தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகமாகி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத பேராபத்தான சூழல் நிலவுகிறது. சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவந்து, பெண்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு காவல்துறை, தன் பங்கிற்கு ரௌடிகளை போல பெண்களைத் தாக்குவதென்பது வெட்ககேடானதாகும்.
கூட்டணி கட்சியின் பெண் மாவட்டச்செயலாளருக்கு நேர்ந்துள்ள இக்கொடுமைக்கு காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் என்ன பதில்கூறப்போகிறார்? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? சமத்துவமா? இதற்கு பெயர்தான் திராவிட மாடலா?” என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
”ஆகவே, தமிழ்நாடு அரசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச்செயலாளர் டிலைட்டா ரவியைத் தாக்கிய காவல்துறையினரைப் பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடரா வண்ணம் காவல்துறைக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.” என்றும் சீமானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.