எச். ராஜா 
செய்திகள்

மதக்கலவரத்தை துாண்டும் பேச்சு… எச். ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Staff Writer

இருபிரிவினரிடையே மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முண்ணனி கடந்த 4ஆம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

அயோத்தி போல் முதல் யுத்தம் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டு வருவோம். அதற்கான முகூர்த்தம் குறிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார். எச்.ராஜாவின் பேச்சு அங்கு கூடி இருந்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இருபிரிவினரிடையே மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.