இத்தாலியின் மொண்டெசில்வானோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பிரதிதீ போர்டோலோய் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
வெறும் 13 வயதான அவர், 18 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் போட்டியிட்டார். அவரைவிட வயதில் மூத்த வீராங்கனைகளுடன் மோதியபோதும், 11 சுற்றுகளில் 7 வெற்றிகள், 4 டிராக்களுடன் தோல்வியின்றி 9 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மேலும், இந்தப் போட்டியில் 13 இந்தியர்கள் பங்கேற்ற நிலையில், இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையாக பிரதிதீ திகழ்கிறார். அவரது சிறப்பான ஆட்டத்தால் பெண்களுக்கான பிரிவில் வழங்கப்படும் இரண்டாவது உயரிய பட்டமான சர்வதேச மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.
சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற செஸ் சாம்பியனான கேரி காஸ்பராவின் பிறந்த நாளான ஏப்ரல் 13 அன்றே பிரதிதீயும் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டில் பயன்படுத்தும் உத்திகள் இருவரிடத்திலும் ஒன்றுபட்டு இருப்பதாக பிரதிதீயின் பயிற்சியாளர் குறிப்பிடுகிறார்.
பிரதிதீயின் சாதனைக்கு விளையாட்டு ஆர்வலர்கள், செஸ் வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.