விளையாட்டு

மில்லர் மரண அடி.. சரண்டர் ஆன இந்தியா.. தென்னாப்பிரிக்கா மாஸ் வெற்றி!

Staff Writer

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 45 ரன்களும், டேவிட் மில்லர் 63 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் வீசினார். அவரது பந்துவீச்சில் இஷான் கிஷன் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, திலக் வர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட்டான அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்தது.

ஷிவம் துபே - ஹார்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப்பை கேசவ் மகாராஜ் உடைத்தார். ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டினை அவர் வீழ்த்தினார். ஹார்திக் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஹார்திக் பாண்டியா மட்டுமின்றி, ரிங்கு சிங் (0 ரன்) மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் (ஒரு ரன்) விக்கெட்டினையும் மகாராஜ் வீழ்த்தினார். இதன் மூலம், அவர் ஓரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபேவும் 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். கார்பின் பாஷ் இரண்டு விக்கெட்டுகளையும், கேப்டன் அய்டன் மார்க்ரம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய டேவிட் மில்லருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.