இலங்கை

ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் திரண்ட தமிழர்கள்!

Staff Writer

இலங்கையில் இனப்படுகொலையின் இறுதிக் கட்டம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

வடக்கு இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களை ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்து, அவர்கள் மீது கொடூரமாக குண்டுவீசிக் கொன்றொழித்து இனப்படுகொலை செய்தது, அப்போதைய மகிந்த இராஜபக்சே தலைமையிலான அரசாங்கம். வடக்கு மாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த 1.43 இலட்சம் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இன்று காலையில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், காலை 10.30 மணியளவில் மதப் பெரியவர்கள் முன்னிலையில் மாவீரரின் தாயார் ஒருவர் பொதுச் சுடரை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து, மணல் பரப்பில் நட்டுவைக்கப்பட்டிருந்த கம்பிகளின் மீது மக்கள் சுடரை ஏற்றி, கொல்லப்பட்டவர்களுக்கும் இராணுவத் தாக்குதலை எதிர்கொண்டு களப்பலியான மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்ச்சிமயமாக தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.