நாகை – இலங்கை கப்பல் சேவை (பழைய படம்)
இலங்கை

மீண்டும் இலங்கைக் கப்பல் சேவை தொடங்கியது!

Staff Writer

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. 

இலங்கை யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் இடையில் சிவகங்கை எனும் பயணியர் கப்பல் போக்குவரத்து ஏற்கெனவே நடைபெற்றுவந்தது. கடந்த அக்டோபரில் கடல் பருவநிலையின் சீரற்ற தன்மையால் பல நாள்கள் தடைபட்ட கப்பல் சேவை, அம்மாதம் 28ஆம் தேதி அதிகாரபூர்வமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னர், பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வானிலையும் சீரான தன்மைக்கு வந்துள்ள நிலையில், நேற்று கப்பல் சேவை தொடங்கியது.

நாகப்பட்டினத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் 77 பேருடன் புறப்பட்ட சிவகங்கை கப்பல், பிற்பகல் 2 மணியளவில் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.

அங்கிருந்து 3 மணிக்கு 92 பயணியருடன் புறப்பட்ட அக்கப்பல், 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தை வந்தடைந்தது.

செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாள்களில் இக்கப்பல் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.