செய்திகள்

திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ. கொடூர கொலை.. ரூ. 1 கோடி நிதியுதவி அறிவித்த முதல்வர்!

Staff Writer

புகாரை விசாரிக்க சென்ற இடத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடந்சந்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு தங்கபாண்டியன், மணிகண்டன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். அந்த தோட்டம் மடத்துகுளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமானதாகும். மகேந்திரன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு அவரின் தோட்டத்தில் பணியாற்றி வந்த மூர்த்தி மற்றும் மகன்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் பிரச்னை தீவிரமடைந்து ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சண்முகவேல் (52) விசாரிக்க சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன்கள் மோதிக் கொண்டிருந்துள்ளனர். சண்முகவேல் அதை தடுத்து சமதானம் செய்ய முயற்சித்தார். இருப்பினும் அவர்கள் சண்முகவேலின் பேச்சை கேட்கவில்லை. ஒருகட்டத்தில் அவர்கள் சண்முகவேலை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சண்முகவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பணியில் இருந்த காவலரை சீருடையுடன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மகனையும் தந்தை வெட்டியுள்ளார். இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.

சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.