தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 16,301 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தமிழகம் முழுதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கடந்த 2 வாரங்களாக தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் 14,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13,299 இருசக்கர வாகனங்களும், 156 மூன்று சக்கர வாகனங்களும், 645 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, போக்குவரத்து அமலாக்கத் துறை கடந்த இரண்டு வாரங்களில், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் ரூ.1.69 கோடி அபராதத் தொகையை வசூலித்துள்ளது.
மேலும், நிலுவையில் உள்ள 8,655 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களுக்கு காவல்துறை அழைப்பு மையம் மூலம் அழைப்பு விடுத்து அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீவிர நடவடிக்கையின் பலனாக 785 வழக்குகள் தீர்க்கப்பட்டதாகவும், ரூ.81.85 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.