தமிழ் நாடு

வாக்களிக்கச் சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Staff Writer

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்ற மூன்று முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் முடிவடைய உள்ளது.

மாலை 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க சென்ற இருவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அதைபோல, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து திருத்தணியை அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (59) என்ற முதியவர் வாக்குசெலுத்த வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க சென்ற 3 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,