நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்துவருகின்றன.
மே-3ஆம் தேதி நடந்த நீட் தேர்வை, வினாத்தாள் கசிவு காரணமாக தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. அதையடுத்து நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு அச்சம் காரணமாக கோவையைச் சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா கடந்த 18ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கோபிகாவும் தன்னை மாய்த்துக்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த மாணவி ரோஷ்ணியும் தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவ நுழைவுத்தேர்வான நீட்டுக்கு இவர் தயார் செய்துவந்தார். ஆனால், அதில் தோல்வியடைந்துள்ளார். இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே நடந்துவிடுமோ என்று அஞ்சிய மாணவி ரோஷ்ணி தற்கொலை செய்துகொண்டார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் 12-ஆம் வகுப்புத் தேர்வை முடித்துவிட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார்.
ஆனால், அதில் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் தேர்வு எழுதவிருந்த மாணவர் வெற்றியானந்தம் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 5 நாள்களில் மட்டும் 4 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.