பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார்?
404 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றமா?
பட்டியல் வெளியிட மு.க.ஸ்டாலின் தயாரா?
”கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள், அதாவது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். வெறும் 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாக ஆதாரங்களுடன் ஆவணமாக பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட பிறகும், 80% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மீண்டும், மீண்டும் பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.” என்று அக்கட்சியின்தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த பொன்னேரியில் உங்க கனவைச் சொல்லுங்க என்ற திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘2021 தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. அவற்றில் 404 வாக்குறுதிகளை இதுவரை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்’’ என்று கூறினார்.
”இது அப்பட்டமான பொய் ஆகும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் நிறைவேற்றாததை நிறைவேற்றியதாக மீண்டும், மீண்டும் பொய்களை கூறுவது அவரது பதவிக்கு அழகல்ல.” என்று அன்புமணி இன்றைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
”திமுக அளித்த வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. திமுக அரசால் முழுமையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகள் ஆகியவற்றை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26&ஆம் தேதி சென்னையில் வெளியிட்டேன். அதன்பின் 5 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இடைப்பட்ட காலத்தில் எந்த வாக்குறுதியும் புதிதாக நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற மோசடி அறிவிப்பை மட்டும் தான் திமுக அரசு வெளியிட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது எப்படி 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கும்? இன்னும் எத்தனைக் காலம் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அமைச்சர்களும் தமிழக மக்களை ஏமாற்றுவார்கள்?
விடியல் எங்கே? ஆவணம் கடந்த ஆகஸ்ட் 26&ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை மறுக்கும் வகையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 2&ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,‘‘திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை’’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறியிருந்தார்.
அதன்பின், கடந்த 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இதே தகவல்கள் வெளியிடப்பட்டன. 5 மாதங்களுக்கு முன் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்காக எழுதப்பட்ட அதே கதை வசனத்தை இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் பேசி நடித்திருக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் எழுதப்பட்ட கதை வசனத்தில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன; 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. இப்போது எழுதப்பட்ட வசனத்திலும் அப்படியே தான் கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 5 மாதங்களில், பரிசீலனையில் இருந்த 40 வாக்குறுதிகளில் ஒன்று கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை திமுக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
* பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த 309&ஆம் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டி அரசு ஊழியர்கள் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளனர்.
* சமவேலைக்கு சம ஊதியம் என்ற 311&ஆம் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
* பகுதி நேர ஆசிரியர்களை பணிநிலைப்பு செய்வதற்கான 181&ஆம் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
* கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை, சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படவில்லை, மாதம் ஒரு முறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரவில்லை, ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை, பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவில்லை என மக்களால் எளிதில் உணரக்கூடிய வாக்குறுதிகளிலேயே ஏராளமானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால், 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாக்க திமுக முயல்கிறது. திமுக அரசு உண்மையாகவே வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று பலமுறை சவால் விடுத்திருக்கிறேன். ஆனால், திமுக அரசால் பதில் கூற முடியவில்லை.
இப்போது மீண்டும் அறைகூவல் விடுக்கிறேன். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும் இல்லாவிட்டால் இது குறித்து என்னுடன் நேருக்கு நேர விவாதிக்கவாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஒப்புக்கொண்டு மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.