தமிழகம், மேற்குவங்க சட்டப்பேரவைகள், மற்ற சில மாநிலப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களை முன்னிட்டு 'மதுவிலக்கு நாள்' கடைப்பிடிக்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் துணை இயக்குநர் ப.பவன் அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
” அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது.
தமிழ்நாடு மாநிலம் மற்றும் மேற்கு வங்காளத்தில் (முதற்கட்டம்) வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) அன்றும், மேற்கு வங்காளத்தில் (இரண்டாம் கட்டம்) வாக்குப்பதிவு ஏப்ரல் 29, 2026 (புதன்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4, 2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 135C-ன்படி, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக நாற்பத்தெட்டு மணி நேர கால அளவிற்குள், விடுதிக்கும், உணவகம், மதுக்கூடம், கடை அல்லது மற்ற பொது அல்லது தனிப்பட்ட இடங்கள் என எங்கும் ஆல்கஹால் கலந்த, புளித்த அல்லது போதையூட்டும் எந்தவொரு மதுபானமோ அல்லது அது போன்ற இதர பொருட்களோ விற்கப்படவோ, வழங்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது.
மேற்கூறிய சட்ட விதிகளின்படி, சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரம் 'மதுவிலக்கு நாளாக' (Dry day) அறிவிக்கப்பட்டு அந்தந்த மாநில/யூனியன் பிரதேச சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட வேண்டும். ஏதேனும் மறுவாக்குப்பதிவு நடைபெறுமாயின், அந்த நாளும் இதில் அடங்கும்.
வாக்குகள் எண்ணப்படும் தேதியான மே 4, 2026 (திங்கட்கிழமை) அன்றைய தினமும் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தொடர்புடைய சட்டங்களின் கீழ் 'மதுவிலக்கு நாளாக' அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிடுகிறது.
மேற்கூறிய நாட்களில் எந்தவொரு மதுபானக் கடைகள், விடுதிகள், உணவகங்கள், மகிழ்நிலையங்கள் மற்றும் மது விற்பனை செய்யும் அல்லது பரிமாறும் இதர நிறுவனங்கள் எவருக்கும் மதுபானம் விற்கவோ அல்லது வழங்கவோ அனுமதி இல்லை.
உரிமையாளர் இல்லாத மகிழ்நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் பல்வேறு வகை உரிமங்களின் கீழ் மதுபானம் வைத்திருக்கவும் விநியோகிக்கவும் அனுமதி பெற்றுள்ள விடுதிகள் எவற்றுக்கும் இந்த நாட்களில் மது வழங்க அனுமதி இல்லை.
மேற்கூறிய காலகட்டத்தில் மதுபானத்தைச் சேமித்து வைப்பது கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும் உரிமம் பெறாத இடங்களில் மதுபானம் சேமித்து வைப்பது தொடர்பான கலால் சட்டக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.” என்று ப. பவன் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.