மதுரை மேலூரில் ஏற்பட்ட கார் விபத்தில், குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில், ஒரு கார் மீது மற்றொரு கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் மதுரைக்குச் சென்றுகொண்டு இருந்தார். மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி, சாலையின் மறுபுறம் வந்த மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கார் நொறுங்கியது. காரில் பயணித்த ஸ்ரீராம், அவருடைய மனைவி ரஞ்சனா, அவர்களது ஒன்றரை வயது குழந்தை பிரனிதா உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று பேர் மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, மேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.